புதன், நவம்பர் 23, 2016

ஆசாரியன் ஜீவிக்கவேண்டிய மாதிரி

ஆசாரியன் எப்படிபட்டவனாய் இருக்கவேண்டும் என்பதை கடந்த இடுகைகளில் நாம் பார்த்தோம். இந்த பதிவில் ஆசாரியனின் ஜீவிதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் பார்க்க கர்த்தர் உதவி செய்வாராக...!

1. தலைப்பாகை ஆசாரியனை விட்டு நீங்ககூடாது :- லேவி 1௦ : 6
     ஆசாரியனின் வஸ்திரங்களில் ஓன்று தலைப்பாகை. தலைப்பாகை வைத்திருக்கும் ஆசாரியன் மகிமையை அல்லது கனத்தை கிரீடமாக வைத்து இருக்கிறான் என்று அர்த்தம், அந்த தலைப்பாகையை எடுத்தால் , கனவீனம் உண்டாகிவிடும். எனவே , ஆசாரியன் தனது கனத்தை காத்து கொள்ளவேண்டியது அவசியம்.  கனம் என்றவுடன் படிப்போ அல்லது பட்டங்களோ என்று நாம் நினைக்ககூடாது. இரட்சிப்பு தான் அந்த தலைசீரா என்று புதிய ஏற்பாட்டில் நாம் வாசிக்கிறோம். எபே 6: 17 , 1 தெச 5 : 8. ஆசாரியன் தான் பெற்று கொண்ட இரட்சிப்பை காத்து கொள்ளவேண்டும்...


2. வஸ்திரங்கள் கிழிக்கப்பட கூடாது :- லேவி 1௦ : 6
     பழைய ஏற்பாட்டு காலங்களை நாம் பார்க்கும் போது , துக்கம் ஏற்ப்படுகிற வேளைகளில் தங்கள் வஸ்திரங்களை கிழித்து கொள்ளுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆசாரியனுடைய வஸ்திரங்களை பரிசுத்த வஸ்திரங்கள் என்று வேதம் சொல்லுகிறது ( யாத் 28 : 2-4 ).  இந்த ஆசாரியனின் வஸ்திரங்கள் மேல் ரத்தம் தெளிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டது ( லேவி 8 : 30 ) பரிசுத்தமாக்கப்பட்டது. வெளி 7 : 14 ல் சொல்லப்பட்ட படி ஆட்டுக்குட்டியின் ( இயேசுவின் ) ரத்தத்தினால் தான் இந்த வஸ்திரம் பரிசுத்தமாக்கப்பட்டது. எனவே எக்காலத்திலும் , ஆசாரியன் இந்த பரிசுத்தத்தை இழந்து போக கூடாது....




3. ஆசாரியன் கூடாரத்தை விட்டு புறப்பட்டு போகக் கூடாது :- லேவி 1௦:7
     ஆசாரியனுக்கு வேலை தேவனுடைய கூடாரத்தில் தான் என்பதை மறந்து போக கூடாது....எந்த நேரம் மக்கள் பலி செலுத்த வந்தாலும், அந்த ஊழியத்தை நிறைவேற்ற ஆசாரியன் கூடாரத்தில் இருக்கவேண்டும். கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் ( எரேமி 48 : 10 ) . எனவே , ஆசாரியன் தேவனுடைய வீட்டை அல்லது சபையை குறித்த உத்திரவாதம் உள்ளவனாக இருக்கவேண்டும்...


4 . கர்த்தர் சொன்னவைகளை போதிக்கிறவனாய் இருக்கவேண்டும் :- லேவி 1௦ : 1௦ - 11
     ஆசாரியன் கடமைக்காய் பிரசங்கம் பண்ணுகிறவனாய் அல்லது தனது சொந்த புத்தியில் இருந்து எடுத்து பேசுகிறவனாய் இருக்கக்கூடாது. பரிசுத்தம் உள்ளதற்கும் , பரிசுத்தம் இல்லாததற்கும் , தீட்டுள்ளதற்க்கும் , தீட்டில்லாததற்கும் வித்தியாசம் பண்ணும்படி கர்த்தர் சொன்ன பிரமாணங்களை போதிக்கிறவனாய் இருக்கவேண்டும்....


தொடரும்......!

செவ்வாய், நவம்பர் 22, 2016

இயேசு கிறிஸ்து வருவார் என்ற நிச்சயம்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்த காரியங்கள் அநேகருக்கு நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக தான் காணப்படுகிறதுஆனால் எல்லா கேள்விகளுக்கும் , சந்தேகங்களுக்கும் பரிசுத்த ஆவியானவரே நமக்கு எழுதி தந்திருக்கிற வேத புத்தகம் ஒன்றே பதில் கொடுக்க முடியும் என்பதே உண்மை

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக பிறப்பதற்கு பல நூறு / ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவரை குறித்த உரைக்கப்பட்ட அநேகம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் அப்படியே நிறைவேறி இருப்பதை நாம் புதிய ஏற்பாட்டு பகுதியில் / வரலாற்றில் காணமுடியும்அப்படிப்பட்ட சில தீர்க்கதரிசனங்கள் மற்றும் அவைகளின் நிறைவேறுதல்கள் ஆகியவற்றை நாம் கவனித்து பார்த்தால்  போதும் இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த உலகத்திற்கு வருவார் என்ற தீர்க்கதரிசனம் அதிவிரைவில் நிறைவேறப்போகிற உண்மை என்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும் .





இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்தாக பிறப்பார்

ஆதாமும் , ஏவாளும் தேவன் விதித்த கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தபொழுது , பிதாவாகிய தேவன் அவர்கள் மூலம் உலகில் பிரவேசித்த பாவத்திற்கு பரிகாரம் கொடுக்க வரப்போகும் இயேசு கிறிஸ்து ஸ்தீரியின் வித்தாக பிறந்து , பாவத்தின் அதிகாரியான பிசாசை ஜெயிப்பார் என்று  முதல் தீர்க்கதரிசனத்தை ஆதி 3 : 15 ல் கொடுப்பதை நாம் பார்க்கிறோம் .

" உனக்கும் ஸதீரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் ; அவர் உன் தலையை நசுக்குவார் , நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்ஆதி 3 : 15


இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளின் படியே ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்து கிருபையும்  ,  சத்தியமும்  நிறைந்தவராய்  ஏறக்குறைய  2000   வருடங்களுக்கு  முன்பாக  ஸதீரியின் வித்தாக இந்த உலகத்தில் மனிதனாக பிறந்துகல்வாரி சிலுவையில் பிசாசின் தலையை நசுக்கி ஜெயம் எடுத்தார் .   இந்த தீர்க்கதரிசன நிறைவேறுதலை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய சாவிக்கு எழுதுகிற பொழுது இப்படி எழுதுகிறார்

"காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். "  கலா 4 : 5


இயேசு கிறிஸ்து ஆபிரஹாமின் சந்ததியில் பிறப்பார்

விக்கிரகங்களை சேவித்து கொண்டிருந்த ஆபிராமை தேவன் தெரிந்தெடுத்து , அவரை அழைத்து அவரை ஆசீர்வதித்த பொழுது       " பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் " என்ற ஒரு பெரிய ஆசீர்வாதத்தை ஆதியாகமம் 12 : 3 ல் கொடுத்ததை நாம் வாசிக்கிறோம் .

ஆபிரகாமின் சந்ததியான ஈசாக்கின் மூலம் ஒரு குறிப்பிட்ட சந்ததி மாத்திரம் தான் ( இஸ்ரவேல் ஜனம் ) மாத்திரம் தான் ஆசீர்வதிக்கப்பட முடியும்எனவே இங்கு குறிப்பிடபட்டு இருக்கிற இந்த ஆசீர்வாதம் ஆபிரகாமின் சந்ந்ததியான இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியில் உள்ள சகல ஜனங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்பதே சாலப் பொருந்தும்

எனவே தான் புதிய ஏற்பாடு ஆரம்பிக்கிறபொழுதே  " ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு:"  மத் 1 : 1 என்று ஆரம்பிக்கிறது .

மேலும் இந்த சந்ததியை குறித்து, அதாவது இந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை குறித்து  அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய சபைக்கு எழுதுகிற பொழுது இப்படி எழுதுகிறார்

“ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே “. - கலா 3 : 16



இயேசு கிறிஸ்து யூதா கோத்திரத்தில் பிறப்பார் :

கோத்திரப்பிதாவாகிய யாக்கோபு தனது அந்திம காலத்தில் தனது பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் பொழுது சமாதான கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் பிறப்பார் என்று தீர்க்கதரிசனமாக உரைத்து உள்ளதை நாம் ஆதியாகமம் 49 ம் அதிகாரத்தில் பார்க்கலாம் .

"சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்."  - ஆதி 49 : 10


இந்த தீர்க்கதரிசன வார்த்தையின் படியே நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யூதா கோத்திரத்தில் பிறந்தார் என்பதை நாம் மத்தேயு 1 ம் அதிகாரம் 2 , 3 வசனங்களிலும் மற்றும் லூக்கா எழுதின சுவிஷேசம் 3 ம் அதிகாரத்திலும் நாம் வாசித்து பார்க்க முடியும்எபிரேய நிருபத்தை ஆக்கியோனும் இந்த காரியத்தை குறித்து எழுதுகையில் இப்படி எழுதுகிறார்

"நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது;"  எபி 7 ; 14


இயேசு கிறிஸ்து பெத்லகேமில்  பிறப்பார் :

கர்த்தர் இயேசு யூதா கோத்திரத்தில் பிறப்பார் என்ற தீர்க்கதரிசனம் மாத்திரமல்ல அவர் பெத்லகேலமிலே பிறப்பார் என்றும் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டதுகிட்டத்தட்ட கிமு 710 ம் வருடத்தில் மீகா தீர்க்கதரிசி இதைக்குறித்து மீகா 5 : 2 ல் இப்படியாக தீர்க்கதரிசனம் உரைக்கிறார் ...

"எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது." மீகா 5 ; 2


இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்காகவே குடிமதிப்பு எழுதும்படி அகுஸ்துராயனால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பது தான் என் விசுவாசம்ஆம் பாருங்கள் லூக்கா எழுதின சுவிஷேசம் 2 ம் அதிகாரம் 5 ம் வசனத்தை நாம் வாசித்து பார்க்கிற பொழுது அவர்கள் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்கு போனார்கள் என்று எழுதப்பட்டு உள்ளது .   ஆமென் ....அல்லேலுயா ...!


இயேசு கிறிஸ்து வாசம் பண்ணிய இடங்கள்

ஆண்டவர் இயேசு வாசம் பண்ணிய இடங்கள் கூட தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த ஆச்சரியம் தானே ...

ஆண்டவர் இயேசு எகிப்துக்கு கொண்டு போகப்படுவார் என்பதையும் , அவர் சில காலம் அங்கு வாசம் பண்ண வேண்டும் என்பதையும் ஓசியா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக "எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் - ஓசியா 11 : 1 "  கிமு 740 ம் வருடத்தில் உரைத்துள்ளார் ..

இந்த தீர்க்கதரிசனம நிறைவேறியதை நாம் மத்தேயு 2 ம் அதிகாரம் 14 மற்றும் 15 ம் வசனங்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்இயேசு இந்த உலகத்தில் குழந்தையாக பிறந்த பொழுது ஏரோது அவரை கொலை செய்ய தேடினபடியால் , தூதன் மூலம் எச்சரிக்கப்பட்டு யோசேப்பும் , மரியாளும் இயேசுவை எடுத்துக்கொண்டு எகிப்துக்கு போனார்கள் என்பதை நாம் பார்க்க முடிகிறது .

இயேசு கிறிஸ்து கலிலேயா என்ற இடத்தில வாசம் பண்ணுவார் என்பதை ஏசாயா தீர்க்கதரிசி கிமு 740 ல் தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளதை நாம் ஏசாயா 9 ம் அதிகாரம் 1 , 2 வசனங்களில் நாம் வாசித்து பார்க்க முடியும் .

இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும்படியாக இயேசு கிறிஸ்து நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார் என்று மத்தேயு 4 ம் அதிகாரம் 13 , 14 , 15 வசனங்களில் நாம் வாசித்து பார்க்கமுடிகிறது



இயேசு கிறிஸ்து 30 வெள்ளி காசுக்கு காட்டி கொடுக்கப்படுவார்

இயேசு கிறிஸ்துவுக்கு வேண்டிய நண்பனே  அவரை காட்டி கொடுப்பான் என்பதை தாவீது பரிசுத்த ஆவியினால் நிறைந்து தீர்க்கதரிசனமாக தனது சங்கீதத்தில் சொல்லியிருக்கிறதை நாம் பார்க்கமுடியும்சங்கீதம் 41 : 9 சொல்லுகிறது , " என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்

அதை போலவே , இயேசுவோடு கூட இருந்து அப்பம் புசித்தவனும் , அவருடைய அற்புதங்களையெல்லாம் கூட இருந்து பார்த்தவனுமாகிய யூதாஸ் அவரை காட்டி கொடுத்தான் ...


அவரை காட்டி கொடுப்பதற்காக கூலியாக 30 வெள்ளிக்காசை யூதாஸ் பெற்று கொள்ளுவான் என்பதையும் , பின்பு அந்த 30 வெள்ளிகாசை கொண்டு குயவனின் நிலம் ஓன்று வாங்கப்படும் என்பதை கூட தீர்க்கதரிசனமாக கூறப்பட்டுள்ளது ...

"உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.  கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்."   சகரி 11 ; 12 , 13இந்த தீர்க்கதரிசனம் கூறப்பட்ட காலம் தோராயமாக கிமு 487 ஆக இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது .

இந்த தீர்க்கதரிசனம் எவ்வளவு துல்லியமாக நிறைவேறியது என்பதை மத்தேயு 26 : 15 மற்றும் மத்தேயு 27 ; 3 - 10 வசனங்களை வாசிக்கும் பொழுது நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது



இயேசு கிறிஸ்துவின் மரணம்

இயேசு கிறிஸ்து எப்படி பாடுபட்டு  ,  அடிக்கப்பட்டு ,  ஒடுக்கபட்டவராய்  கல்வாரியில்  சிலுவையில்  அறையப்படுவார்  என்பதை  ஏசாயா 53   அதிகாரத்தில்  ஏசாயா  தீர்க்கதரிசி   மூலமாய் பரிசுத்த ஆவியானவர் தெளிவாக உரைத்துள்ளதை  நாம் பார்க்கமுடியும்அவைகள்  அனைத்தும்  அப்படியே  இயேசு கிறிஸ்துவின்  பூவுலக வாழ்வில் சம்பவித்ததை நாம் அறிந்திருக்கிறோம் .



இன்னும் அநேக காரியங்கள் , ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டவை எல்லாம் துளி கூட மாறாமல் அப்படியே நிறைவேறி இருக்கும் பொழுதுஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்த தரிசனங்களும் , தீர்க்கதரிசனங்களும்தேவ வார்த்தைகளும் நிச்சயம் நிறைவேறும் என்பது நிச்சயமல்லவா ....!